Tuesday, December 10, 2013

மகா கவி பாரதியார் சில நினைவுகள்



பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும், சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால் இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. ஐயர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்து விடுவார்.

ஐயரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத் தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை, குட்டிகள் பிறக்காஎன்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார்.

ஐயருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக் காய்கள்; பாரதியாருக்கோ காய்கள் குழந்தைகள் மாதிரி.

[”மகாகவி பாரதியார்” - .ரா.]
தமிழ்நாட்டுத் தேச பக்தன்என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சர்க்காருக்கு மனுப்பண்ணிக் கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலைநிமிர்ந்து கொள்வதற்கு எனக்கு தைரியம் உண்டாயிற்று.

[”மகாகவி பாரதியார்” -  
.ரா.]
பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், ‘யார்?’ என்று கேட்டார்.

தமிழில் பதில் சொல்லி இருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.

அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லைஎன்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று.

ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை.

அப்பொழுது அவர் பாடிய பாட்டு, ‘மறவன் பாட்டுஎன்று பாடியிருக்கிறாரே, அதுதான்.

[”மகாகவி பாரதியார்” -  

.ரா.]
1919 பெஃப்ருவரி மாதம்.






பாரதியார்:
மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:
மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:
இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:
அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது; தக்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போடமுடியுமா?

பாரதியார்:
முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் வெளியே போனதும், “ இவர் யார்?” என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி ஐயங்கார் பதில் சொல்லவில்லை.

காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.

ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஎன்று சொன்னார்.

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுய்ம். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.

எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

[”மகாகவி பாரதியார்” - .ரா.]
பாரதியார் வீட்டிலோ அல்லது மடுகரை ஏரிக்கரை முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும்போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

இது இன்று சகஜமாய்த் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம். எங்களுக்கு இந்த மாதிரியான காரியம் நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் யாராவது வீட்டார் பார்த்து விட்டால் என்ன செய்வது என்னும் திகில்.
[ ஸ்ரீ அரவிந்த தரிசனம் - அமிர்தா ]
பாரதி பிறந்து நாளையுடன் 131 ஆண்டுகளும், இறந்து 92 ஆண்டுகளும் ஆகின்றன. இன்று வரை அவருடைய எழுத்துகள் முழுமையாய்ப் படிக்கப்படவுமில்லை. கடைப்பிடிக்கப்படவுமில்லை.

அவருடைய அடித்து நைந்து போன கவிதை வரிகளுக்கப்பால் அவரை விசாலமாகப் படித்தவர்களை, அவரை ஒரு சிறுகதாசிரியராக, கட்டுரையாளராக, யோகியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாசிரியராக, தேசியவாதியாக அவரின் பன்முகங்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம். இது என் அனுபவம்.

சிமிழுக்குள் அடங்கும் அடிமையில்லை அவன். காற்றாய், கதிரவனாய், நீராய், நிழலாய் ஊடுருவி நிற்கும் சர்வ வியாபி அவன்.

சிலைக்குக் கடனே என்று மாலையிடுபவர்களுக்கும், அந்தச் சிலையின் மீது எச்சமிடும் காக்கைகளுக்கும், குளிரூட்டப்பட்ட அறைகளில் பாரதியின் வரிகளை ஜீவன் இல்லாமல் ஒப்பிப்பவர்களுக்கும், சொல் ஒன்று; செயல் ஒன்று என்று வாழ்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்கள் பாரதியை அறிய மாட்டார்கள்.
பாரதியாருக்கு வேண்டியவை நல்ல எழுதுகோல், வெள்ளைக் கடுதாசி, தனிமை. அச்சடிப்பது போல் வேகமாக எழுதிக் குவிப்பார். ஒரு நிமிஷமேனும் தொழிலின்றியிருப்பதை விரும்பார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டு. சரீரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு நண்பர் வீட்டில் கத்தி வீச்சுப் பழகல் ஆறுமாத காலம் நடைபெற்றது.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]
மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜாஎன்றார் பாரதி.

என்ன ஆச்சர்யம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடை பெற்றுக் கொண்டார்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம் 
]
நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி. காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள்; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரஸிப்பார்கள்; அர்ச்சுனனது வீரத்தையும், கர்ணன் கொடையையும், தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி. யாரேனுமொரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால், அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]
ஏழைக் குடியானவச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச்சருகுகள் அரித்துக்கொண்டும் செல்லுவார்கள்.

ஒருநாள் பாரதியார் அவர்களிடன் சென்று,”சிறுவர்களே! எதற்காக வேப்பம்பழம் பொறுக்குகிறீர்கள்?” என்றார்.

சாமி! வயிற்றுக்கில்லாததால் வேப்பம்பழத்தைத் தின்கிறோம்என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும், புளியங்காயையும் பறித்துத் தின்றார்.

பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. வேப்பங்காய் கசக்கும்என்று மனத்தில் எண்ணுவதனால்தான் கசக்கின்றது. அமிர்தம்என்று நினைத்தால் தித்திக்கின்றதுஎன்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.

சின்ன வயதில் நெய் சற்று நாற்றமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதிருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார், மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களுடன் சேர்ந்து வேப்பங்காய் தின்னவும், இடுப்பில் நாலு முழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]
அப்போதுதான் உலக மகாயுத்தமும் முடிவடைந்த சமயம். புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள் கூடப் பலிக்கவில்லை. பொருளாதார நிலை ஒர காரணம். மற்றொன்றுகலையுணர்ச்சிநாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களைப் பிடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]
கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது” - பாரதியார்.
பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழக் கூடாது. யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை நோக்கினால், நீ அவனைத் தைரியமாகப் பத்து நிமிஷம் உற்றுப்பார். அவன் வெட்கித் தலை குனிந்து விடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்து விட்டு அப்பால் செல்என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]

புதியதில் ஆசை; நைந்ததில் வெறுப்பு; பேசும்போது கிளி போலக் கொஞ்ச வேண்டும்; கர்ண கடூரமாகப் பேசுவது கூடாது; பேச்சே ஒரு சங்கீதம் போல அமைய வேண்டும்என்பது பாரதியாரின் தனிப் போக்குகள்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]

சில சமயம் அரிசி இராது. பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு, “பூணூல் வேண்டுமா? வேண்டாமா?” என்று வாதம் செய்து கொண்டிருப்பார். யாகம்செய்யும் கருத்து என்ன? என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்பழம் வாங்கி வந்து எல்லோரும் பசியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால் விடுவாள். அந்தப் பாலைக் குடித்து விட்டுச் சும்மா இருப்போம். இப்படியும் சில நாட்கள் கழிந்ததுண்டு.

அரிசி இல்லையென்று சொல்லாதே.அகரம் இகரம்என்று சொல்லுஎன்று சொல்லுவார். இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்என்ற வார்த்தை அவரது புன்பட்ட ஹிருதயம் கொதித்துப் புறப்பட்டதாகும்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்]
சுதேசமித்திரனில் சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுபவர்கள், பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களைத் தாக்கியும், தேச கைங்கர்யம் செய்யும் உண்மைத் தியாகிகளைப் பூஷித்தும், அவர்களுக்கு உற்சாகமூட்டியும் கவிகள் புனைந்தார்.

நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கிற்று. தமிழர்கள் கல்வியறிவு இல்லாமல், “எழுதச் சொன்னால் தும்பிக்கை யொன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையிலிருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்துக் கூறி அறிவு பெறக்கூடிய அனேக பாடல்களும், கட்டுரைகளும் எழுதிக் குவித்தார்.
[செல்லம்மா பாரதியார் - பாரதியார் சரித்திரம்”.]

செல்லம்மாள் பாரதியின் இரு வானொலி உரைகள் - II
===========================================
"
என் கணவர்என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே?

சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று;

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

செல்லம்மாள் பாரதியின் இரு வானொலி உரைகள் - I
===========================================
7
ஆம் வயதிலேயே 14 வயது பாரதியுடன் திருமணம். நிலையான வருமானம் இல்லாத கவிஞனாய் மட்டுமே வாழத் தெரிந்த பாரதியுடன் 25 வருட வாழ்க்கை - பதினைந்து வயதில் முதல் குழந்தை - நாளெல்லாம் துரத்திய வறுமையின் பரிதவிப்பு - உற்றார் உறவினர்களின் பகிஷ்கரிப்பு - கணவனின் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய நிறைவேறாத பேராசைகள் - இரு பெண் குழந்தைகளுடன் குடும்ப நிர்வாகம் - கணவனின் அகால மரணத்தோடு 32 வயதிலேயே தனிமரமான வாழ்வு.

செல்லம்மாளின் வானொலி உரையிலேயே சொல்வது போல பாரதி போன்ற -யுகத்துக்கு ஒரு முறை உதிக்கும் ஒரு மஹாகவிஞனின் மனைவியாய் வாழ்வது லௌகீகமான வாழ்வை மட்டுமே அறிந்த ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு அத்தனை சாமான்யமான விஷயமல்ல.

ஆனாலும் பாரதியின் ஆளுமை தெரியும் இந்த இரு உரைகளையும் படித்து அதன் பின் மெல்லிய குரலில் கேட்பதாய்க் கற்பனை செய்து பாருங்கள். பாரதியின் மறைவுக்குப் பின் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன இந்த உரைகள்.

தன் 62 வயதில் ஆற்றிய உரைகளில்தான் ஒரு கவிஞனின் மனைவியாக எத்தனை பெருமையும், ஒரு குடும்பத் தலைவியாக எத்தனை ஆதங்கமும் :

திருமதி செல்லம்மாள் பாரதி தில்லி வானொலியில் பாரதி அறியாத கலைஎன்ற தலைப்பில் ஆற்றிய முதல் உரை.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படிக் கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.

சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;
அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம். தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது.

புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும் பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம் - என்னால் மறக்க முடியாது.

மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன.அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம்.

அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!

நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை நாராயண நாமத்தை ஜபித்தார்.

  நன்றி திரு.சுந்தர்ஜி




No comments:

Post a Comment